நான்தான்

நான்தான்

Friday, December 3, 2010

சில மரங்களும் ஒரு ரம்பமும்

கல்லூரி முதலாமாண்டு மொழிப்பாட வகுப்பறையில் உரைநடைப் பாடம் நடத்தும்போது மாணவர்களை எழுந்து நின்று ஆளுக்கொரு பத்தி வாசிக்கச் சொல்வது என் வழக்கம். பெரும்பாலான தமிழாசிரியர்கள் இப்படிச் செய்வார்கள் என்பது என் நம்பிக்கை. இன்றைய மாணவர்களில் பலருக்கும் தமிழ் வாசிக்கத் தெரியவில்லை. அதைக்குறித்து அவர்களில் பலருக்கு எந்தவித வெட்கமும் கிடையாது. எழுந்து நின்று என்னால் வாசிக்கமுடியாது என்று கூறிவிட்டு, தண்டனையாக வகுப்பு முடியும் வரை நின்று கொண்டு இருப்பார்கள்.

ஒருநாள் உரைநடைப்பாட வகுப்பொன்றில் அவ்வையாரின் கல்வியியல் சிந்தனைகள் பற்றிய பாடம் நடந்துகொண்டிருந்தது. பாடத்தின் இடையே

கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்

அவையல்ல நல்ல மரங்கள் அவை நடுவே

நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறியா

மாட்டாதவன் நன் மரம் (மூதுரை, பாடல் எண் 13)

என்னும் பாடலை நடத்த வேண்டிவந்தது.

கிடைத்தது நமக்கொரு வாய்ப்பு, இந்த மாணவர்களைக் கேலி செய்ய, என்று மனத்துள் நினைத்தவாறு இப்படிச்சொல்ல ஆரம்பித்தேன்.

அவ்வையார் ஒருநாள் விறகு வெட்டி ஒருவனைச் சந்தித்தார். அவன் விறகுவெட்டக் காட்டுக்குள் சென்றுகொண்டிருந்தான்.

அவனிடம் அவ்வையார்,

நல்ல மரங்களை எப்படித் தேர்ந்தெடுப்பாய் என்று கேட்டார்.

கிளை பல விட்டு வைரம்பாய்ந்து காட்டுக்குள் இருக்கும் மரங்கள் தான் நல்ல மரங்கள் என்று அவன் தன் அனுபவத்தைக் கொண்டு பதில் கூறினான்.

அதற்கு அவ்வையார் அவனிடம்,

இல்ல தம்பி, அவையெல்லாம் நல்ல மரங்கள் அல்ல. வகுப்பறையில் வாத்தியார் எழுந்து படி என்று சொல்லும்போது படிக்கத் தெரியாமல் பேந்தப் பேந்த முழித்துக்கொண்டு நிற்கின்ற மாணவர்கள்தான் நல்ல மரங்கள் என்று பதில் சொன்னார்.

(அவ்வையாரைத் துணைக்கு வைத்துக்கொண்டு வாசிக்க மறுத்த மாணவர்களை மரமண்டைகள் என்று திட்டி விட்ட மகிழ்ச்சி எனக்கு)

இதனை நான் சொல்லி முடிக்கவும் கடைசிவரிசை இருக்கையிலிருந்து ஒரு குரல் உடனடியாக ஒலித்தது.

நாங்க மரம்னா? ரம்பம் யாரு? என்று.

No comments: