நான்தான்

நான்தான்

Sunday, November 28, 2010

குழந்தைகள் உலகம் - நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

குழந்தைகள் உலகம் குதூகலமானது. அவர்களோடு கலந்துகொண்டு அவர்களின் அறியாமையிலும் அறிவுத்தேடலிலும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்த துயர்நிறைந்த உலகத்தையே மறந்துபோகலாம். குழலினிது யாழினிது எனபர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். தம் மக்கள் பிறர் மக்கள் என்று பிரித்துப் பார்க்காமலே இதை ஒத்துக்கொள்ளலாம். குறும்புசெய்யும் மழலைபேசும் எந்தக் குழந்தையையும் தம்மக்களாகக் கண்டு மகிழலாம். நான் ரசித்த சில குழந்தைக் குறும்புகள் இங்கு உங்களுக்காய்.

நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வு ஒன்றினை எழுதித் திரும்பியிருந்த நாளொன்றின் மாலைப்பொழுது அது. நான், என் தங்கைகள் மூவர், என் மனைவி, என் நண்பர் தர்மலிங்கம் என அன்றைய தேர்வெழுதியிருந்த அனைவரும் என் வீட்டில் கூடியிருந்தோம். காலையில் எழுதியிருந்த தேர்வின் வினாத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான சரியான விடைகளைத் தேடிக்குறித்து எங்கள் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

என் தங்கை அனிதா, தன் மகள் நிரஞ்சனாவைத் தன் மடியில் படுக்கவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.

நிரஞ்சனா, அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். காலையில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் தேர்வுக்குப் போய்விட்ட தன் அம்மா மீதான கோபத்துடன், அம்மா மடியில் தலைவைத்துப் படுத்தவாறு எங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நண்பர் தர்மலிங்கம் கேள்வி எண்களை வாசிக்க, நான் சரியான விடைக்குரிய எழுத்தை (பல்வாய்ப்பு வினாக்கள் – Multiple Choice Questions) B, A, D, A, C என்று கூறிக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் தங்கள் குறித்துக்கொண்டிருந்தார்கள்.

சற்றுநேரம் எங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனா சட்டென்று எழுந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்து உரத்த குரலில்,

“ உங்களுக்கு ஏபிசிடி கூட தெரியலை, உங்களையெல்லாம் யாரு காலேஜ் புரொபசராச் சேர்த்தாங்களோ தெரியலை. A,B, C,D,E,F, . . . , X,Y,Z இப்படித்தான் சொல்லனும். அய்யோ! அய்யோ! எனத் தன் தலையிலடித்துக்கொண்டு மீண்டும் தன் அம்மா மடியில் படுத்துக்கொண்டாள். சற்றுநேரம் ஒன்றும் புரியாமல் விழத்த, எங்களுக்கு புரிபட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தோம்.

நம்ம திட்டினதுக்கு இவங்க ஏன் இப்படிச் சிரிக்கிறாங்கன்னு அப்பயும் அவள், நிரஞ்சனா, எங்களை முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தாள்.

Thursday, November 25, 2010

நூல் அகம் நுழைவது எப்படி?

வீட்டுக்குள் நூல் பல அடுக்கி வைத்து நூலகமாய் மாற்றுவது கூட மிக இயல்பாய் நடைபெற்றுவிடுகிறது. கொஞ்சம் பணமும் நூல் வாங்க மனமும் இருந்தால் போதும், வீடும் ஒரு நூலகமாகும்.

ஆனால் நூல் அகம் நுழைவதுதானே அறிவை விருத்தி செய்யும். அதற்கு என்ன வழி? என்பது புரியவில்லை.

படிக்கலாமென்று நூலைக் கையில் எடுத்தவுடன் வேறுவேலைகள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளி படிக்க உட்கார்ந்தாலும் மனம் அலைபாய்கிறது. நூறுவரிகள் படித்தபின்னும் மனதில் ஒன்றும் நுழைந்தபாடில்லை. நுழைந்தால்தானே தங்குவதற்கு. முதல்வரியை மீண்டும் பார்க்கையில் புதுவரியாகத்தான் தெரிகின்றது.

அருகில் யாரேனும் இருந்து பேசிக்கொண்டிருந்தால் இடையிடையே நம் கவனம் சிதறுவது இயல்பு. ஆனால் ஒருவரும் அருகில் இல்லா நேரத்தும் படிக்கையில் கவனம் சிதறுவதை எப்படித்தடுப்பது? படிப்பு மட்டும் வசப்பட்டுவிட்டால் அதைப்போல வேறு ஒரு ஆழ்நிலைத் தியானம் அமைந்துவிடாது. ஆனால் ஒவ்வொரு முறையும் தியானம் கைகூடுவதில்லை.

சிலநேரங்களில் படைப்பாளி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். புதுப்பெண் கைப்பட்ட நொடிபோல் மனமயங்கித் தொடர்ந்துசென்றால் செவி செவிடாகி மூக்கு முகர்விழந்து சூழல் மறந்து புத்துலகம் புலப்படும் எனில் படைப்பொன்று படைக்கப்பட்ட கணமே படைப்பாளி இறந்துவிடுகிறான் என்பது எப்படி?

பெரும்பாலான நூல்கள் அகம் நுழைய முடியாமல் மேசையின்மீதே அல்லது கட்டிலின் ஓரத்தில் கிடக்கின்றன. சிலநாட்கழித்து அலமாரியில் ஏறி அடுக்குகளுக்கிடையே மறைந்தும் போகின்றன.

நன்றாகப் படித்துவிட்டதாய் எண்ணி எடுத்துவைக்கப்பட்ட புத்தகத்தையும் பலநாள் கழித்து எடுத்துப் பார்க்கும்போது இந்த நூல் நாம் படித்த்துதானா என்னும் ஐயத்தைக் கிளப்புவதாய் அமையும் மனம் ஒரு சாபக்கேடு.

பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை பசியாறும் முனிவனின் இரையை கனியைச் சிதைத்ததால் சாபம்பெற்றோம் சபித்தவன் பசித்த முனிவன்தான் என்பது காயசண்டிகைக்குத் தெரிந்திருந்தது. நாமென்ன பிழை செய்தோம் பலமுறை படித்தாலும் அகம் நுழையாச் சாபத்தை நமக்கு எவன் தந்தான் என்று எண்ணத்தான் தோன்றுகிறது அகம் நுழைய மறுக்கும் நூல்களைக் காணும்போது.

Wednesday, November 24, 2010

சிவநாராயணும் சாரு நிவேதிதாவும்

சிவநாராயண் என் நண்பர். கல்லூரியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்.

சில திரைப்படங்களைப் பார்க்குமாறு எனக்கு அவர் அறிவுறுத்தினார். அமீர்கானின் ரசிகரான அவர் லகான் திரைப்படத்தைப் பார்க்குமாறு கூறினார். எனக்கு இந்தி தெரியாது என்று கூறியபோது ஆங்கில அடிக்குறிப்புகள் இருக்கும் என்றார். பார்த்தேன். படம் பிடித்திருந்தது.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படம் வெளியானபோது நண்பர்களோடு சேர்ந்துசென்று பார்த்தோம். சிம்புதேவனின் இம்சை அரசன் ஏற்படுத்திய ஆர்வம் படம் வெளியாகும் நாளை நோக்கி எங்களைக் காத்திருக்கவைத்திருந்தது. படம் வெளியாகி ஒரு வாரம் சென்றுதான் பார்க்க முடிவுசெய்திருந்தோம். அதற்குள் வேறு நண்பர்கள் படம் சரியில்லை என்றும் பத்து நிமிடத்திற்கு மேல் உட்கார முடியவில்லை என்றும் கூறி தயவுசெய்து அந்தப்படத்திற்குப் போய்விடாதீர்கள் என்று எங்களை மிரட்டினார்கள். சிம்புதேவனை நாங்கள் நம்புவதாகச் சொல்லி எங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் சென்று படத்தைப் பார்த்தோம். காட்சிக்கு காட்சி வரிக்குவரி எங்களால் ரசிக்க முடிந்தது. சிம்புதேவனின் ஏளனத்தைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு தற்கால அரசியல் பற்றிய நோக்கும் அதனோடு இணைத்துப்பார்க்கும் தெளிவும் அவசியம் என்பதால் மற்றவர்களுக்கு இப்படத்தோடு இணைந்து ரசிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அதற்குப்பிறகு நாங்கள் இணைந்து பார்க்க முடிவு செய்த படம் எந்திரன். சிறுவயதில் ரஜினி ரசிகர்கள் என்பதாலும் ஷங்கரின் பிரம்மாண்டம் கவரக்கூடியது என்பதாலும் எந்திரன் பற்றிய எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எந்திரனுக்கான விளம்பரம் எரிச்சலூட்டுவதாக இருந்தது என்றாலும் படம் வெளியான முதல்வாரம் சென்று படம் பார்த்தோம். படம் ரசிக்கக் கூடியதாய்த்தான் இருந்தது.

உயிர்மை இதழில் சாரு நிவேதிதா எந்திரனைப் பற்றி எழுதியிருந்த எதிர்வினைக் கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நானெல்லாம் சாப்பிடுகிற வேளையில் அந்தச் சாப்பாடு சுவையானதாக இருக்கிறதா என்று பார்ப்பேனே தவிர இது அம்மா சமைத்தது போல் இல்லை என்றோ அல்லது இதைவிட எதிர்வீட்டு மாமி சுவையாகச் சமைப்பாள் என்றோ நினைத்துப் பார்ப்பதில்லை. சாரு பல படங்களுடன் ஒப்பிட்டு எந்திரனைக் குப்பை என்றார். ஷங்கர் ரஜினியை அவமானப்படுத்திவிட்டார் வீணடித்துவிட்டார் என்றெல்லாம் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை சிவநாராயணிடம் கொடுத்தேன். படித்து விட்டு "சாருவின் யோக்கியதை எனக்குத் தெரியாதா" என்று கத்தினார்.

ஒருவர் ஒரு விஷயத்தில் எரிச்சல்படுகிறார் என்றால் அவரை மீண்டும் மீண்டும் எரிச்சல்படுத்திப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். அண்மையில் சாருவின் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது 'லகான் ஒரு குப்பை' என்று கூறியிருந்தார். 'ஆஸ்காருக்கு லகான் போவது இந்தியர்களுக்கு வெட்கக்கேடு' என்றும் கூறியிருந்தார். நான் இந்தப் பக்கத்தையும் சிவநாராயணிடம் காண்பித்தேன். மீண்டும் கத்தத்தொடங்கினார்.

"சாரு பற்றி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டது எப்ப தெரியுமா. முந்தி எல்லாம் எனக்கும் சாரு பிடிக்கும். அவர் நித்யானந்தரைப் பற்றி உயர்வா எழுதிக்கிட்டிருந்ததைப் படிச்சிருக்கேன். விஜய் டிவி நீயா நானாவில வந்து உட்கார்ந்து தான் ஏன் நித்யானந்தரோட சிஷ்யனா இருக்கேன்னு விளக்கம் சொல்லிக்கிட்டிருந்தார் சாரு. ஆனா அதே சாரு நித்யானந்தர் மாட்டிக்கிட்டதும் அதே விஜய் டிவில வந்து உட்கார்ந்து நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததைப் பற்றி வெட்கப்படுவதாய் விளக்கம் கொடுத்துக்கிட்டிருந்தார். அவர் நல்லா இருக்கிறப்ப இவர் பெருமைப்படுவாராம் அவர் கேவலப்பட்டுப்போனார்னா இவர் வெட்கப்படுவாராம். ஏன் இவருக்கு முன்னாடியே தெரிஞ்சுக்க முடியல. எல்லாம் தான் உத்தமன்னு போடுற நாடகம்

இது சிவநாராயணோட வாதம்.

ஆனா ஒரு விஷயம் நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததற்கு வெட்கப்பட்ட சாருவைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. எத்தனையோ பேர் இன்னும் நித்யானந்தர நம்புறாங்களே.

எந்திரனைக் குப்பைன்னு சொன்னாலும் லகானைக் குப்பைன்னு சொன்னாலும் எனக்கு சாரு மேல கோபமோ கருத்து வேறுபாடோ கிடையாது. சாருவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. சாருவின் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும். மாதம் ஒன்று என வாங்கத்தான் என்னால் முடியும் என்பதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் பெரும்பாலும் படித்து விட முடிவு செய்துள்ளேன்.

Thursday, November 18, 2010

முருகேச பாண்டியனின் இலக்கிய நண்பர்கள் III



இங்கு முறையே கோணங்கி, பிரபஞ்சன், மு.ராமசாமி

முருகேச பாண்டியனின் இலக்கிய நண்பர்கள் II



இங்கு முறையே சுந்தர ராமசாமி, கலாப்ரியா,

முருகேச பாண்டியனின் இலக்கிய நண்பர்கள்






முருகேச பாண்டியன் எழுதிய என் இலக்கிய நண்பர்கள் படித்தேன், அதில் இடம்பெற்றிருந்த சில இலக்கிய நண்பர்கள் இங்கே. முறையே மணா,
ப. சிங்காரம், நகுலன், விக்ரமாதித்யன், யவனிகா