நான்தான்

நான்தான்

Sunday, November 28, 2010

குழந்தைகள் உலகம் - நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

குழந்தைகள் உலகம் குதூகலமானது. அவர்களோடு கலந்துகொண்டு அவர்களின் அறியாமையிலும் அறிவுத்தேடலிலும் நம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்த துயர்நிறைந்த உலகத்தையே மறந்துபோகலாம். குழலினிது யாழினிது எனபர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதவர் என்றார் வள்ளுவர். தம் மக்கள் பிறர் மக்கள் என்று பிரித்துப் பார்க்காமலே இதை ஒத்துக்கொள்ளலாம். குறும்புசெய்யும் மழலைபேசும் எந்தக் குழந்தையையும் தம்மக்களாகக் கண்டு மகிழலாம். நான் ரசித்த சில குழந்தைக் குறும்புகள் இங்கு உங்களுக்காய்.

நிரஞ்சனாவும் ஏபிசிடி தெரியாத புரொபசரும்

தமிழ்நாடு அரசு போட்டித்தேர்வு ஒன்றினை எழுதித் திரும்பியிருந்த நாளொன்றின் மாலைப்பொழுது அது. நான், என் தங்கைகள் மூவர், என் மனைவி, என் நண்பர் தர்மலிங்கம் என அன்றைய தேர்வெழுதியிருந்த அனைவரும் என் வீட்டில் கூடியிருந்தோம். காலையில் எழுதியிருந்த தேர்வின் வினாத்தாளைக் கையில் வைத்துக்கொண்டு அதற்கான சரியான விடைகளைத் தேடிக்குறித்து எங்கள் விடைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

என் தங்கை அனிதா, தன் மகள் நிரஞ்சனாவைத் தன் மடியில் படுக்கவைத்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தாள்.

நிரஞ்சனா, அப்போது எல்.கே.ஜி. படித்துக்கொண்டிருந்தாள். காலையில் தன்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் தேர்வுக்குப் போய்விட்ட தன் அம்மா மீதான கோபத்துடன், அம்மா மடியில் தலைவைத்துப் படுத்தவாறு எங்களையெல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள்.

நண்பர் தர்மலிங்கம் கேள்வி எண்களை வாசிக்க, நான் சரியான விடைக்குரிய எழுத்தை (பல்வாய்ப்பு வினாக்கள் – Multiple Choice Questions) B, A, D, A, C என்று கூறிக்கொண்டிருந்தேன். மற்றவர்கள் தங்கள் குறித்துக்கொண்டிருந்தார்கள்.

சற்றுநேரம் எங்களையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்த நிரஞ்சனா சட்டென்று எழுந்து அமர்ந்தாள். என்னைப் பார்த்து உரத்த குரலில்,

“ உங்களுக்கு ஏபிசிடி கூட தெரியலை, உங்களையெல்லாம் யாரு காலேஜ் புரொபசராச் சேர்த்தாங்களோ தெரியலை. A,B, C,D,E,F, . . . , X,Y,Z இப்படித்தான் சொல்லனும். அய்யோ! அய்யோ! எனத் தன் தலையிலடித்துக்கொண்டு மீண்டும் தன் அம்மா மடியில் படுத்துக்கொண்டாள். சற்றுநேரம் ஒன்றும் புரியாமல் விழத்த, எங்களுக்கு புரிபட்டவுடன் விழுந்து விழுந்து சிரித்தோம்.

நம்ம திட்டினதுக்கு இவங்க ஏன் இப்படிச் சிரிக்கிறாங்கன்னு அப்பயும் அவள், நிரஞ்சனா, எங்களை முறைச்சுப் பார்த்துக்கிட்டிருந்தாள்.

No comments: