நான்தான்

நான்தான்

Wednesday, November 24, 2010

சிவநாராயணும் சாரு நிவேதிதாவும்

சிவநாராயண் என் நண்பர். கல்லூரியில் உடன் பணியாற்றும் பேராசிரியர்.

சில திரைப்படங்களைப் பார்க்குமாறு எனக்கு அவர் அறிவுறுத்தினார். அமீர்கானின் ரசிகரான அவர் லகான் திரைப்படத்தைப் பார்க்குமாறு கூறினார். எனக்கு இந்தி தெரியாது என்று கூறியபோது ஆங்கில அடிக்குறிப்புகள் இருக்கும் என்றார். பார்த்தேன். படம் பிடித்திருந்தது.

இரும்புக்கோட்டை முரட்டுச் சிங்கம் படம் வெளியானபோது நண்பர்களோடு சேர்ந்துசென்று பார்த்தோம். சிம்புதேவனின் இம்சை அரசன் ஏற்படுத்திய ஆர்வம் படம் வெளியாகும் நாளை நோக்கி எங்களைக் காத்திருக்கவைத்திருந்தது. படம் வெளியாகி ஒரு வாரம் சென்றுதான் பார்க்க முடிவுசெய்திருந்தோம். அதற்குள் வேறு நண்பர்கள் படம் சரியில்லை என்றும் பத்து நிமிடத்திற்கு மேல் உட்கார முடியவில்லை என்றும் கூறி தயவுசெய்து அந்தப்படத்திற்குப் போய்விடாதீர்கள் என்று எங்களை மிரட்டினார்கள். சிம்புதேவனை நாங்கள் நம்புவதாகச் சொல்லி எங்கள் திட்டத்தை மாற்றிக்கொள்ளாமல் சென்று படத்தைப் பார்த்தோம். காட்சிக்கு காட்சி வரிக்குவரி எங்களால் ரசிக்க முடிந்தது. சிம்புதேவனின் ஏளனத்தைப் புரிந்துகொள்வதற்கு நமக்கு தற்கால அரசியல் பற்றிய நோக்கும் அதனோடு இணைத்துப்பார்க்கும் தெளிவும் அவசியம் என்பதால் மற்றவர்களுக்கு இப்படத்தோடு இணைந்து ரசிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அதற்குப்பிறகு நாங்கள் இணைந்து பார்க்க முடிவு செய்த படம் எந்திரன். சிறுவயதில் ரஜினி ரசிகர்கள் என்பதாலும் ஷங்கரின் பிரம்மாண்டம் கவரக்கூடியது என்பதாலும் எந்திரன் பற்றிய எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. எந்திரனுக்கான விளம்பரம் எரிச்சலூட்டுவதாக இருந்தது என்றாலும் படம் வெளியான முதல்வாரம் சென்று படம் பார்த்தோம். படம் ரசிக்கக் கூடியதாய்த்தான் இருந்தது.

உயிர்மை இதழில் சாரு நிவேதிதா எந்திரனைப் பற்றி எழுதியிருந்த எதிர்வினைக் கட்டுரையைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நானெல்லாம் சாப்பிடுகிற வேளையில் அந்தச் சாப்பாடு சுவையானதாக இருக்கிறதா என்று பார்ப்பேனே தவிர இது அம்மா சமைத்தது போல் இல்லை என்றோ அல்லது இதைவிட எதிர்வீட்டு மாமி சுவையாகச் சமைப்பாள் என்றோ நினைத்துப் பார்ப்பதில்லை. சாரு பல படங்களுடன் ஒப்பிட்டு எந்திரனைக் குப்பை என்றார். ஷங்கர் ரஜினியை அவமானப்படுத்திவிட்டார் வீணடித்துவிட்டார் என்றெல்லாம் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையை சிவநாராயணிடம் கொடுத்தேன். படித்து விட்டு "சாருவின் யோக்கியதை எனக்குத் தெரியாதா" என்று கத்தினார்.

ஒருவர் ஒரு விஷயத்தில் எரிச்சல்படுகிறார் என்றால் அவரை மீண்டும் மீண்டும் எரிச்சல்படுத்திப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம். அண்மையில் சாருவின் எனக்குக் குழந்தைகளைப் பிடிக்காது என்ற புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் சிறந்த திரைப்படங்களைப் பற்றி எழுதும்போது 'லகான் ஒரு குப்பை' என்று கூறியிருந்தார். 'ஆஸ்காருக்கு லகான் போவது இந்தியர்களுக்கு வெட்கக்கேடு' என்றும் கூறியிருந்தார். நான் இந்தப் பக்கத்தையும் சிவநாராயணிடம் காண்பித்தேன். மீண்டும் கத்தத்தொடங்கினார்.

"சாரு பற்றி நல்லாத் தெரிஞ்சுக்கிட்டது எப்ப தெரியுமா. முந்தி எல்லாம் எனக்கும் சாரு பிடிக்கும். அவர் நித்யானந்தரைப் பற்றி உயர்வா எழுதிக்கிட்டிருந்ததைப் படிச்சிருக்கேன். விஜய் டிவி நீயா நானாவில வந்து உட்கார்ந்து தான் ஏன் நித்யானந்தரோட சிஷ்யனா இருக்கேன்னு விளக்கம் சொல்லிக்கிட்டிருந்தார் சாரு. ஆனா அதே சாரு நித்யானந்தர் மாட்டிக்கிட்டதும் அதே விஜய் டிவில வந்து உட்கார்ந்து நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததைப் பற்றி வெட்கப்படுவதாய் விளக்கம் கொடுத்துக்கிட்டிருந்தார். அவர் நல்லா இருக்கிறப்ப இவர் பெருமைப்படுவாராம் அவர் கேவலப்பட்டுப்போனார்னா இவர் வெட்கப்படுவாராம். ஏன் இவருக்கு முன்னாடியே தெரிஞ்சுக்க முடியல. எல்லாம் தான் உத்தமன்னு போடுற நாடகம்

இது சிவநாராயணோட வாதம்.

ஆனா ஒரு விஷயம் நித்யானந்தரோட சிஷ்யனா இருந்ததற்கு வெட்கப்பட்ட சாருவைத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு. எத்தனையோ பேர் இன்னும் நித்யானந்தர நம்புறாங்களே.

எந்திரனைக் குப்பைன்னு சொன்னாலும் லகானைக் குப்பைன்னு சொன்னாலும் எனக்கு சாரு மேல கோபமோ கருத்து வேறுபாடோ கிடையாது. சாருவின் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. சாருவின் அனைத்து நூல்களையும் படிக்க வேண்டும். மாதம் ஒன்று என வாங்கத்தான் என்னால் முடியும் என்பதால் இன்னும் ஒரு ஆண்டுக்குள் பெரும்பாலும் படித்து விட முடிவு செய்துள்ளேன்.