நான்தான்

நான்தான்

Thursday, November 25, 2010

நூல் அகம் நுழைவது எப்படி?

வீட்டுக்குள் நூல் பல அடுக்கி வைத்து நூலகமாய் மாற்றுவது கூட மிக இயல்பாய் நடைபெற்றுவிடுகிறது. கொஞ்சம் பணமும் நூல் வாங்க மனமும் இருந்தால் போதும், வீடும் ஒரு நூலகமாகும்.

ஆனால் நூல் அகம் நுழைவதுதானே அறிவை விருத்தி செய்யும். அதற்கு என்ன வழி? என்பது புரியவில்லை.

படிக்கலாமென்று நூலைக் கையில் எடுத்தவுடன் வேறுவேலைகள் நினைவுக்கு வருகின்றன. அவற்றை எல்லாம் புறந்தள்ளி படிக்க உட்கார்ந்தாலும் மனம் அலைபாய்கிறது. நூறுவரிகள் படித்தபின்னும் மனதில் ஒன்றும் நுழைந்தபாடில்லை. நுழைந்தால்தானே தங்குவதற்கு. முதல்வரியை மீண்டும் பார்க்கையில் புதுவரியாகத்தான் தெரிகின்றது.

அருகில் யாரேனும் இருந்து பேசிக்கொண்டிருந்தால் இடையிடையே நம் கவனம் சிதறுவது இயல்பு. ஆனால் ஒருவரும் அருகில் இல்லா நேரத்தும் படிக்கையில் கவனம் சிதறுவதை எப்படித்தடுப்பது? படிப்பு மட்டும் வசப்பட்டுவிட்டால் அதைப்போல வேறு ஒரு ஆழ்நிலைத் தியானம் அமைந்துவிடாது. ஆனால் ஒவ்வொரு முறையும் தியானம் கைகூடுவதில்லை.

சிலநேரங்களில் படைப்பாளி நம்மைக் கைப்பிடித்து அழைத்துச் செல்கிறார். புதுப்பெண் கைப்பட்ட நொடிபோல் மனமயங்கித் தொடர்ந்துசென்றால் செவி செவிடாகி மூக்கு முகர்விழந்து சூழல் மறந்து புத்துலகம் புலப்படும் எனில் படைப்பொன்று படைக்கப்பட்ட கணமே படைப்பாளி இறந்துவிடுகிறான் என்பது எப்படி?

பெரும்பாலான நூல்கள் அகம் நுழைய முடியாமல் மேசையின்மீதே அல்லது கட்டிலின் ஓரத்தில் கிடக்கின்றன. சிலநாட்கழித்து அலமாரியில் ஏறி அடுக்குகளுக்கிடையே மறைந்தும் போகின்றன.

நன்றாகப் படித்துவிட்டதாய் எண்ணி எடுத்துவைக்கப்பட்ட புத்தகத்தையும் பலநாள் கழித்து எடுத்துப் பார்க்கும்போது இந்த நூல் நாம் படித்த்துதானா என்னும் ஐயத்தைக் கிளப்புவதாய் அமையும் மனம் ஒரு சாபக்கேடு.

பனிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை பசியாறும் முனிவனின் இரையை கனியைச் சிதைத்ததால் சாபம்பெற்றோம் சபித்தவன் பசித்த முனிவன்தான் என்பது காயசண்டிகைக்குத் தெரிந்திருந்தது. நாமென்ன பிழை செய்தோம் பலமுறை படித்தாலும் அகம் நுழையாச் சாபத்தை நமக்கு எவன் தந்தான் என்று எண்ணத்தான் தோன்றுகிறது அகம் நுழைய மறுக்கும் நூல்களைக் காணும்போது.

No comments: