நான்தான்

நான்தான்

Wednesday, October 29, 2014

ஹார்லிக்ஸ் தமிழர்கள்


ஹார்லிக்ஸ் தோன்றிய கதை தெரியும் உங்களுக்கு.
ஹார்லிக்ஸ் என்னும் பெயர் தோன்றிய கதை தெரியுமா? ஹார்லிக்ஸ் தயாரிப்புமுறையினைக் கண்டறிந்தவர் ஒரு தமிழர் என்பது தெரியுமா? அதற்கு இந்தப் பெயர் வரக்காரணம் அண்ணன்தம்பிகளான இரண்டு தமிழர்கள் என்பது தெரியுமா?
இருநூறாண்டுப் பழைய கதையினைத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழர் வரலாற்றினை நினைவுபடுத்திக்கொள்ளவும் பெருமிதம் கொள்ளவும் எண்ணுபவர்கள் இதனைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் வரலாறு ரொம்ப முக்கியம்.
இன்றைய சிவகங்கையில் உள்ள சூரவத்தி என்னும் கிராமத்தைச் சார்ந்த அண்ணன் தம்பிகள் இருவர். சந்தனராயன், சங்கிலிராயன் என்னும் இவர்கள் இருவரும் பிழைப்பு தேடி பர்மாவின் ரங்கூன் நகரத்துக்கு சுமைகூலிகளாகப் போனவர்கள்.
ரங்கூனிலிருந்து அமெரிக்காவிற்குச் சென்ற கப்பல்களில் வேலை கிடைக்கவும் அங்கு சென்றனர். இவர்கள் இருவரின் கட்டுடலையும் களைப்பின்றி உழைக்கும் திறனையும் கண்ட அமெரிக்கர் ஒருவர் தன் குதிரைப்பண்ணையில் வேலைசெய்ய அழைத்துச்சென்று விட்டார். அவர்கள் அமெரிக்க ஆங்கிலத்தைக் கூடியவிரைவில் கற்றுத்தேறிவிட்டனர்.
அங்குதான் ஹார்லிக்ஸ் பிறந்தது.
நம்மூரில் இருக்கும்போது தாயார் தயாரித்துக்கொடுத்த சத்துமாவினைத் தின்று வளர்ந்திருந்த இருவரும் அமெரிக்காவில் குதிரைப்பண்ணையில் வேலைபார்க்கும்போது அங்கு கிடைத்த மால்ட்டைக் கொண்டு தங்களுக்கு சத்துமாவினை உருவாக்கிக்கொண்டனர்.
தாங்கள் உண்டு மகிழ்ந்த சத்து்மாவினைக் குதிரைகளுக்குக் கொடுத்தால் அவையும் ஊட்டச்சத்துடன் வளரும் என நினைத்த சந்தனராயன், சங்கிலிராயனிடம் அந்தப்பொறுப்பினை ஒப்படைத்தார்.
முதலில் எந்தக்குதிரையும் அந்தச் சத்துமாவினை சாப்பிடவில்லை. மனந்தளராத சங்கிலிராயன் மீண்டும் மீண்டும் முயன்றார். சத்துமாவோடு வேறு சில பொருட்களைச் சேர்த்துக் கொடுத்துப் பார்த்தார்.
ஒருநாள் அவருடைய முயற்சி வென்றது. அதுவரை முகத்தைத்திருப்பிக்கொண்டு போன ஒரு குதிரை நக்கிப் பார்த்தது.
குதிரைப்பண்ணை எழுத்தராகப் பதவி உயர்வுபெற்றிருந்த சங்கிலி ராயன் அந்தச் சத்துமாவினைத் தயாரிக்கும் முறையில் ஒரு குறிப்பேட்டில் எழுதி அருகில் Hors licks என எழுதிவைத்தார்.
அடுத்த நாள் சத்துமாவில் மற்றொரு மாற்றம் செய்திருந்தார். இன்று மற்றொரு குதிரை நக்கியது. அந்தக்குதிரை அந்த வீட்டு முதலாளியம்மாவின் குதிரை. எனவே அந்தச் சத்துமாவு தயாரிப்புமுறையை mother’s hors licks என்று குறிப்பெழுதி வைத்துக்கொண்டார்.
அடுத்த நாள் மற்றொரு மாற்றம். அந்தப் பண்ணை முதலாளியின் இளைய மகன் ஜேம்ஸின் குதிரை நக்கியது. எனவே junior's hors licks என்று எழுதிக்கொண்டார்.
அடுத்தடுத்த நாட்களில் ஒரு அடர்பழுப்பு நிறக்குதிரையும் பழுப்புநிறக் குதிரையும் பந்தயத்துக்காக சரிவிகித உணவு வழங்கப்பட்ட ஒரு குதிரையும் நக்கிச் சென்றன. சங்கிலிராயன் அவற்றைத் தயாரிக்கும் முறைகளையும் குறிப்பெடுத்து வைத்துக்கொண்டார்.
Choclate Hors licks.
Choclate Malt Hors licks.
Diet Hors licks.
குதிரைக்கிடைக்குச் சென்றிருந்த சந்தனராயன் திரும்பிவந்ததும் தம்பியின் விடாமுயற்சியையும் வெற்றிச்செய்தியையும் கேட்டு மகிழ்ச்சியடைந்தார். குறிப்புகளைப் பார்வையிட்டார்.
தம்பியின் ஆங்கிலம் குறைவுடையதாக இருந்ததைக் கண்டித்துத் திருத்தினார். ஒருமை பன்மை மயக்கம் வரக்கூடாது தம்பி என்றும் Hors licks என்று எழுதுவது தவறு என்றும் கூறிய அவர் Hor licks எனத்திருத்தி எழுதச்சொன்னார்.
அண்ணனின் ஆங்கில அறிவை வியந்த சங்கிலிராயன் அவ்வாறே குறிப்புகளை மாற்றி எழுதினார்.
ஜேம்ஸ் ஒருநாள் இந்தச் சத்துமாவினை ருசிபார்த்தார். அவருக்கு இது மிகவும் பிடித்துப்போயிற்று. சந்தனராயன் சங்கிலிராயனை அழைத்து அந்த மாவின் செய்முறையைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
தனது குடும்பத்தினருக்கு அந்தச் சத்துமாவினை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் பின்னர் அதனை தன் ஊராருக்கும் விற்பனை செய்ய ஆரம்பித்தார். சங்கிலிராயனை மதித்து ஹார்லிக்ஸ் என்ற பெயரிலேயே விற்க ஆரம்பித்தார்.
ஹார்லிக்ஸ் விற்க ஆரம்பித்து பிரபலமானதால் அவருடைய குடும்பமே ஹார்லிக்ஸ் குடும்பம் எனப் பெயர்பெற்றது.
பிற்காலத்தில் ஜேம்ஸ் ஹார்லிக்ஸின் பெயரன்கள் வில்லியம்ஸ் ஹார்லிக்ஸூம் ஜேம்ஸ் ஹார்லிக்ஸூம் தயாரிப்புமுறையில் சிறுசிறு மாற்றங்கள் செய்து பெரிய அளவில் தொழிற்சாலைகள் நிறுவி தயாரித்து குப்பிகளில் அடைத்து பலவகையான விளம்பரங்களைப் பயன்படுத்தி முதலில் அமெரிக்கா முழுவதும் பின்னர் உலகம் முழுவதும் என சந்தைப்படுத்தி உலகத்திலுள்ளோர் அனைவரையும் சத்துள்ளவர்களாக மாற்றியது நீங்கள் அனைவரும் அறிந்த கதையே.
படிப்படியாக சங்கிலிராயனின் மற்ற செய்முறைகளையும் தயாரித்துச் சந்தைப்படுத்தி சங்கிலிராயன் வைத்த பெயர்களையே அவற்றிற்குச் சூட்டி சந்தைப்படுத்திவிட்டதும் நீங்களறிந்ததே.
(ஆதாரம்: https://www.horslicks.com/hi story)
தமிழர்களால் கண்டறியப்பட்டு தமிழர்களால் பெயர் சூட்டப்பெற்ற இந்தக் கதையைத் தெரிந்துகொண்ட நீங்கள் ஒரு குவளை குதிரைநக்கி அருந்தி பெருமிதமடைவீர்களாக.
(நகைச்சுவைக்காக, கற்பனையாகப் புனையப்பட்ட புனைவரலாறு)

No comments: